Sunday, August 18, 2013

நிறைவின்றி அடங்கிய பசி - 1




          என்றும் 12 மணிக்கு முன்னால விழிக்காதவன், அன்று 7 மணிக்கு அடி குழாயின் மூலம் என் தூக்கத்தை கலைத்து விட்டான். எழுந்து அமர்ந்து கொண்டேன் . தரையில் படுத்திட்ட வசதியினால் படுக்கையை சுருட்டிடும் வேலை மிச்சமாயிற்று.

           "பல் தேச்சுரலாமா ? ஆபீஸ்க்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கே !! அதுவர என்ன பண்றது? சீக்கிரம் குளிச்சுட்டு இன்னிக்காச்சும் கால சாப்பாடு முடிச்சுருவோம்." என தினசரி மனப்போராட்டங்களுடன் அமர்திருந்தேன்.

            குளித்துவிட்டு வந்தவன் கொடியினில் ஆராய்ந்து கொண்டிருந்தான். 6 பொறியியல் நண்பர்கள்  வசிக்கும் வீட்டில் தனது  உடமைகளை கண்டறிவதில் தனித்திறமையும் பொறுமையும் அவசியம். தனது கருப்பு பார்மல் பேன்ட் ஒன்றை கண்டு பிடிக்க பத்து நிமிடம் பிடித்தது அவனுக்கு. டிப்டாப்பாக கிளம்பியதும் என்னை பார்த்தான்.

         " Interview போறேண்டா.,"

         " எங்கடா, என்ன கம்பெனி ?? "                 

         " பக்கம்தான், MNC ! பேரு மறந்துட்டேன்..  பேரு , address மொபைல்ல இருக்கு :) "

         "MNC  ஆ ?? அப்போ நைட்டு பெரிய ட்ரீட்தான் ! "

         " வாய்லயே குத்த போறேன் பாரு !! கடுப்ப கிளப்பாதடா, இந்த வேலையும் கிடைக்கும்ங்கற நம்பிக்கை இல்ல என்ட. "

         "அதுலாம் கெடசுரும்டா ! என்ன Profile ? "

         "  Electrical Maintenance தான், 3 மாசம் training. இதுக்கு மேல விவரம் தெரில. "

         " Confident ஆ பண்ணு , ALL THE BEST ! "

          " காசு வேணும்டா, சுத்தமா இல்ல என்ட . "

          " எவ்ளோ வேணும் ? "           

         " எவ்ளோ இருக்கோ கொடு மிச்சம் கொடுத்துடுரேன் !! "


          பர்ஸை எடுத்து பார்த்ததில் 83 ருபாய் இருந்தது. வங்கிகாரன் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி accountல்  1094 ருபாய் இருப்பதாய் தெரிவித்தது. மனக்கணக்கு துவங்கியது. சம்பளம் வர சரியாக 10 நாட்கள் பிடிக்கும். ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு 50 ருபாய் என வைத்தால் கூட இருவருக்கு 1000 ருபாய் அவசியம். இந்த மாதம் நெருக்கடி சற்று முன்பே துவங்கியதை உணர்ந்தேன். சென்ற  மாதம் சத்தியம்ல செலவழிச்ச 630 ருபாய் மூடதனமாய் தோன்றியது. ருபாய் 50ஐ எடுத்தேன்,

        " இத வெச்சுக்கோடா, பாத்து சிக்கனமா செலவு பண்ணு ! " என பற்களை தாராளமாய் நீட்டினேன். 

        " போயிட்டு வர செலவுதான்டா.. Don't worry !! இன்னைக்கு சாப்டலாமா ? "

        " நாளைக்கு பாத்துக்கலாம், இன்றைய கணக்கு பட்டினிக்கு செலவாகிட்டது ! "

         எந்த வித பாவனயுமின்றி புரிந்துகொண்டவனாய் வெளியேறினான்.  200 ருபாய் ATMல எடுத்து கொடுத்திருக்கலாமோ என்று உறுத்தலாய் இருந்தது.

        அன்றும் காலை உணவு இருவருக்கும் கணவுடன் நின்றது.



                                                                                                            -- நிர்மல்ராஜ் :)
     
     
      

1 comment: